வெறுப்பைத் தின்று
விரோதம் வளர்க்கும்
வக்கிர மிருகமொன்றை
நேரில் கண்டேன்.
சங்கிலிப் புகையன்
கையிடுக்கிலாடும்
முடிவிலாச் சிகரெட்
கனன்று தரும் கரும்புகை
காற்றில் போடும் கோலமாய்
பரப்புகிறது வன்மம்
பகட்டாடைப் பளபளப்பில்
தன்னழுக்கு மறைத்து
அடுத்தவன் அம்மணத்தில்
ஆனந்தம் காண்கிறதன் மனசு
செத்துப்போகாதா சீக்கிரம்
என்றேங்குவதைத் தவிர
வேறேதும் ஏலாமல்
கசப்பாய்க் கழிகிறது நாட்கள்

பிரம்பு வாத்தியார் கந்தசாமி,
பாட்டு டீச்சர் சரஸ்வதி,
இடிந்து விழுந்த ஏழாப்புக் கட்டிடம்
தோத்து அழுத கபடிப் போட்டி
மயங்கி விழுந்த சுதந்திர தின மார்ச்
மாற்றலாகிப் போன சாந்தி டீச்சர்
எட்டாப்பில் திருமணமாகிய புனிதா
என
பேச எவ்வளவோ இருந்தும்
அவனைப் பற்றியே
அரை மணிநேரம் பேசிச் சென்றான்
எதிர்பாராத தருணமொன்றில்
சந்திக்க நேர்ந்த
பள்ளித் தோழன்.
குறிப்பு : இஃதுவோர் மறுபதிவு
இன்றுமுதல் புத்தகச்சந்தைத் திருவிழா.
குழுமமொன்றில் என் பரிந்துரையாக நான் சொல்லிய புத்தகங்கள் இவை
புது வாசகர்களுக்கு அம்ருதா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் “முத்துக்கள் பத்து” சிறுகதைத் தொகுப்பைப் பரிந்துரைக்கிறேன். விலை 40.00
1. வண்ணதாசன்
2. நாஞ்சில் நாடன்
3. அசோகமித்ரன்
4. ச தமிழ்ச்செல்வன்
5. தி.ஜானகிராமன்
6. கு.அழகிரிசாமி
7. ஆ.மாதவன்
8. வண்ணநிலவன்
கண்மணி குணசேகரன்
1. வெள்ளெருக்கு சிறுகதைத் தொகுதி
2. கோரை அல்லது அஞ்சலை நாவல்
சு. தமிழ்ச்செல்வி
1. அளம் – நாவல்
கந்தர்வன்
1. சீவன் – சிறுகதைத் தொகுதி
நாஞ்சில் நாடன்
1. சூடிய பூ சூடற்க – சிறுகதைத் தொகுதி
2. நஞ்சென்றும் அமுதென்றும் – கட்டுரைத் தொகுதி
பெருமாள் முருகன்
1. கங்கணம்
ஆதவன்
1. காகித மலர்கள்
கி.ரா
1. கோபல்ல கிராமம்
ஜோ டி க்ரூஸ்
1. ஆழி சூழ் உலகு
ஜெயமோகன்.
1, ஊமைச் செந்நாய்
எஸ்ரா
1. கோடுகள் இல்லாத வரைபடம்.
பொதுவாக எதைப்படிக்கும் முன்பும் ஒரு முன்முடிவு இல்லாமல் படித்தால் சுவையாக இருக்கும். நான் அபப்டித்தான் படிப்பேன். முன்னுரை மதிப்புரை எதையும் படிக்க மாட்டேன். இறுதியாகப் படித்தல் நாம் உணர்ந்ததும் முன்னுரை எழுதியவர் உணர்ந்ததும் வேறாக இருக்கும். இல்லையெனில் முன்னுரையில் சொல்லியது முன்னால் வந்து படிக்கும் ஆர்வத்தைக் குறைக்கும்.
நான் சொல்லி இருக்கும் பட்டியல் எல்லா வகைப் புத்தகங்களையும். அதிலிருந்து இந்த வகை பிடிக்கிறது என அதில் மேலும் தேடிப் படிக்கலாம்.
சிந்திச் சிதறும்
சிறு நெல்லியென
சிதறித் தெறிக்கிறது மனது
ஒன்றில் தொடங்கி
மற்றதில் தாவி
பிறிதொன்றில் சாடி
அங்கும் நில்லாது
அடுத்ததிலும் தங்காது
மின்விசிறிக் காற்றில்
அலைந்தலையும் புகையென.
மழைநீரோடிய
சிற்றோடை தேங்கும்
வரியோடிய வண்டலாய்க்
கழிகிறது நாட்கள்
நன்றி : நேசமித்ரன் – “வரியோடிய வண்டல்” பதம் தந்தமைக்கு
Pic Courtesy :www.abstractart.org

விதைகள் புதைந்திருக்கும்
நிலமெப்போதும்
வெம்புவதில்லை
திசையெங்கும்
வேர்கள் கிளைத்துக்
கிழிக்கும்போதும்
வருந்துவதில்லை
விருட்சம்
வசந்தத்தின் வனப்பில்
தன் நிலை மறக்கையில்
புலம்புவதில்லை நிலம்
புயலோ, மழையோ,
இடியோ, வெயிலோ
எம்மாற்றமும் இன்றி
எப்போதும்போல்
விருட்சத்தைத்
தாங்கியபடியே
பின்னொரு நாளில்
விருட்சம் வீழும்போதும்
வேர்க்ளைத் தன்னுள்ளே
புதைக்கும் நிலம்
எப்போதும் அழுவதுமில்லை.