டூ வீலர் ஓட்டும் பெண்மணிகளைப் பார்த்து மனதில்தோன்றியவை இந்தக் கேள்விகள்.  சும்மா ஜாலிக்காகத்தான்.  அந்த வாதி இந்த வாதின்னு அடிக்க வராதீக.

  1. தேடித் தேடி ஹைஹீல்ஸ்வாங்குறீங்க. வண்டியோட ரெண்டு பக்கமும் காலை நீட்டி அதைத் தரையில தேச்சு நோஹீல்ஸ் ஆக்குறீங்களே? அது ஏங்க அப்படி?
  2. ரெண்டு பக்கமும் கண்ணாடி இருக்கு. பின்னாடி என்ன நடக்குதுன்னு முன்னாடிச் சொல்லத்தான் அது. இருந்தாலும் திரும்பும்போது பின்னாடித் திரும்பிப் பார்த்தே திரும்புறீங்களே? அது ஏங்க அப்படி?
  3. திரும்புமுன் சிக்னல் செய்யனும்னு குழந்தைக்குக்கூடத் தெரியும். ஆனா நீங்க திரும்பீட்டேஏஏஏ சிக்னல் போடுறீங்களே? அது ஏங்க அப்படி?
  4. டவுன்பஸ் பின்னாடியே நூல் பிடிச்சுப் போறீங்க. அது நின்னா நிக்கிறீங்க போனாப் போறீங்க [டவுன் டு வீலர் சர்வீஸ் மாதிரி]. அது ஏங்க அப்படி?
  5. ரோட்டுல யாருமே இல்லைன்னாலும் 100 அடிக்கு ஒரு தடவை ஆரன் அடிக்கிறீங்க. அது ஏங்க அப்படி?
  6. ரெண்டு குழந்தைங்க, அவங்க பேக், லன்ச் பேக், உங்க பேக் எல்லாம் மாட்டிக்கிட்டு, ராதாகிருஷ்ணன் கடையில அரைக்கிலோ தக்காளி, ஒரு கிலோ வெங்காயம், ரெண்டு பால்பாகட் வாங்கிட்டு வர்ர்றீங்க? அது என்ன ஸ்கூட்டியா டாடா ஏஸா? அது ஏங்க அப்படி?
  7. லைட் எரியுதுன்னு பக்கத்துல வந்து சொன்னா ”தேங்க்ஸ்”னு சொல்லாம “பரவாயில்லை”ன்னு சொல்றீங்க? அது ஏங்க அப்படி?
  8. டு வீலர் பஞ்சராகுறது சகஜம். ஆனா உங்க வண்டி பஞ்சராயிட்டா காலேல முழிச்ச மூஞ்சி சரியில்லைன்னு அலுத்துக்கிறீங்க. அது ஏங்க அப்படி?
  9. இன்ஸ்சூரன்ஸ் இருக்கான்னு கேட்டா, “10 லட்ச ரூபாய்க்கு இருக்கு”ன்னு சொல்றீங்க. அது ஏங்க அப்படி?
  10. வண்டி நம்பர் கேட்ட 4565, 4656, 5646னு எல்லாக் காம்பினேசனும் சொல்றீங்க. 4556னு உன்மையான் நம்பரச் சொல்லவே மாட்டேங்கிறீங்க . அது ஏங்க அப்படி?

இன்னும் இருக்குங்க. ஆனா பயமா இருக்கு.

 

படம் : நெட்டிலிருந்து சுட்டது.

இன்றுமுதல் புத்தகச்சந்தைத் திருவிழா.

குழுமமொன்றில் என் பரிந்துரையாக நான் சொல்லிய புத்தகங்கள் இவை

புது வாசகர்களுக்கு அம்ருதா பதிப்பகம் வெளியிட்டிருக்கும் “முத்துக்கள் பத்து” சிறுகதைத் தொகுப்பைப் பரிந்துரைக்கிறேன். விலை 40.00

1. வண்ணதாசன்
2. நாஞ்சில் நாடன்
3. அசோகமித்ரன்
4. ச தமிழ்ச்செல்வன்
5. தி.ஜானகிராமன்
6. கு.அழகிரிசாமி
7. ஆ.மாதவன்
8. வண்ணநிலவன்

கண்மணி குணசேகரன்
1. வெள்ளெருக்கு சிறுகதைத் தொகுதி
2. கோரை அல்லது அஞ்சலை  நாவல்

சு. தமிழ்ச்செல்வி
1. அளம் – நாவல்

கந்தர்வன்
1. சீவன் – சிறுகதைத் தொகுதி

நாஞ்சில் நாடன்
1. சூடிய பூ சூடற்க – சிறுகதைத் தொகுதி
2. நஞ்சென்றும் அமுதென்றும் – கட்டுரைத் தொகுதி

பெருமாள் முருகன்
1. கங்கணம்

ஆதவன்
1. காகித மலர்கள்

கி.ரா
1. கோபல்ல கிராமம்

ஜோ டி க்ரூஸ்
1. ஆழி சூழ் உலகு

ஜெயமோகன்.
1, ஊமைச் செந்நாய்

எஸ்ரா
1. கோடுகள் இல்லாத வரைபடம்.
பொதுவாக எதைப்படிக்கும் முன்பும் ஒரு முன்முடிவு இல்லாமல் படித்தால் சுவையாக இருக்கும். நான் அபப்டித்தான் படிப்பேன். முன்னுரை மதிப்புரை எதையும் படிக்க மாட்டேன். இறுதியாகப் படித்தல் நாம் உணர்ந்ததும் முன்னுரை எழுதியவர் உணர்ந்ததும் வேறாக இருக்கும். இல்லையெனில் முன்னுரையில் சொல்லியது முன்னால் வந்து படிக்கும் ஆர்வத்தைக் குறைக்கும்.

நான் சொல்லி இருக்கும் பட்டியல் எல்லா வகைப் புத்தகங்களையும். அதிலிருந்து இந்த வகை பிடிக்கிறது என அதில் மேலும் தேடிப் படிக்கலாம்.

கீழக் கோட்டர்ஸ் வேப்பமரம், அதனடியில் கயிற்றுக் கட்டிலில் படுத்திருக்கும் அப்பாயி,  குருவிக்கூடு ஹேர்ஸ்டைல் ஆறுமுகம் அண்ணன், அவர் வளர்த்த ”டைகர்”, சிதம்பரம் மாமா, கருவாயன் இளங்கோ, ஜெயபால், ரெஜினா, அப்துல் அஜீஸ், எம்பாலன்,  கொட்டமடித்த கிணறு,  தலைப்பிரட்டை பிடித்து வந்து குழம்பு வைக்கச் சொல்லி அம்மாவிடம் செய்த வம்பு, சண்முக நதிக்குக் குளிக்கச் சென்று தீ வைத்த வைக்கோல் படப்பு, பம்பரக் கயிற்றுக்கு ஹார்லிக்ஸ் டப்பா முடியைக் கட்டி வந்த பாலமுருகன்,  ஓட்டிப் பழகிய மட்கார்டு, பெல் ஏதுமற்ற சைக்கிள், எப்போதும் கேட்டுக் கொண்டிருந்த இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபன ஆசிய சேவை, கோபால் பற்பொடி என இன்னும் இன்னும் பலவற்றை ஞாபகப் படுத்தும் ஒற்றை நபராக வந்திருந்தார் பா.ராஜாராம் – கரு வேல நிழல் தருபவர்.

ஒரு வார்த்தை, சம்பவம், உடை, வாசனை, மாறுபட்ட நடை, உணவுப்பழக்கம் என ஏதோவொன்றுடன் மனிதர்களை அடையாளப்படுத்திக் கொள்கிறோம். அந்த ஒன்றை மீண்டும் பார்க்கவோ அனுபவிக்கவோ நேர்கையில் அந்த மனிதர்களின் ஞாபகம் மீளும். ஆனால் ஒட்டு மொத்த பால்யத்தின் நினைவுகளை இப்படிச் சட்டென ஒரே வார்த்தையில் உயிர்த்தெழ வைப்பது ராஜாராமால் மட்டும்தான் முடியும் – மக்கா.

ராஜாராம்,ஜ்யோவ்ராம்,குமார் என சில நண்பர்கள் பேனா நண்பர்களாக அறிமுகமாகி இருக்கிறார்கள்; நட்பையும் தொடர்ந்திருக்கிறார்கள். குழந்தை கிழித்துப் போட்ட காகிதமாக வாழ்க்கை அவர்களை திசைக் கொன்றாக எறிந்து விட்டது.  பொருள் தேடும் நிமித்தம் தொடர்புகளைப் பேண இயாலாமற் போயிற்று.

தம்பியின் ஆலோசனைப் படி வலைப்பூ ஒன்றைத் தொடங்கி தனது கவிதைகளைப் பதிவு செய்திருக்கிறார் ராஜாராம். கவிதை வாசிப்பில் தீராத தாகம் கொண்ட ஜ்யோவ் கண்களில் அது பட, அந்தக் கவிதை முன்பு எங்கேயோ படித்தாற்போல இருக்கிறதே என யோச்சித்துச் சரியாகப் பிடித்துவிட்டார் ராஜாராமை.

விகடனில் வெளியான இவரது கவிதையைப் படித்து இன்னொரு பேனா நண்பர் விகடன் அலுவலகத்தில் பேசி ராஜாராமிற்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்; அவர்தான் இவரோ என்ற அய்யத்துடன்.  அவரேதான் இவர் எனக் கண்டு கொண்ட பேனா நண்பரைப் பார்க்க கோவை வந்திருந்தார். 13 வருடங்களுக்குப் பிறகு துளிரும் நட்பு.

சிலரோடு சில விஷயங்களைப் பேசலம். இன்னும் சிலரோடு பலவற்றைப் பேசலாம். ஆனால் ராஜாராமோடு எதையும் பேசலாம்.  இத்தனை வருட வாழக்கையும் அதில் அவர் ஏறி இறங்கிய மேடு பள்ளங்களும் கடந்த தூரங்களும் காத்திருப்புகளும் எதிர்பார்த்தவைகளும் ஏமாற்றங்களும் என எல்லாம் அவரைப் பக்குவமாக்கி இருக்கின்றன.

வேப்பமர நிழல் போல அல்ல கருவேல நிழல். கூரிய முற்களால் செய்த படுக்கை விரிப்பு மரத்தினடியில். அதில் எப்படி ஆசுவாசம் செய்வது?

”கடுமையான வறட்சி எதையும் விளைவிக்க முடியாது. குளங்களில் எல்லாம் கருவேலமரமே வளர்ந்தது. எங்களுக்கு இளைப்பாற இடம் அதனடியில் என்பதைத் தவிர வேறு தேர்வு செய்ய வாய்ப்பே இல்லை. வேறு வழியின்றி அதையே பழக்கப் படுத்திக் கொண்டோம்.

ஆனால் கருவேலம்பூ வாசனைக்கு நிகரான ஒன்றை இதுவரை நான் நுகர்ந்ததில்லை”

உண்மைதான் ராஜாராம். உங்கள் மூலம் அதை நானும் நுகர்ந்தேன்.