நல்ல இலக்கியப்படைப்பு ஒரு கால கட்டத்தை அல்லது ஒரு சாரரின் வாழ்க்கையைப் படம் பிடித்துப் பிரதிபலிக்க வேண்டும்.

மனல் கடிகை – எம் கோபால கிருஷ்ணன்
கோரை – கண்மணி குனசேகரன்
அளம், கீதாரி – சு தமிழ்ச் செல்வி
சிலுவைராஜ் சரித்திரம் – ராஜ் கெளதமன்
ஏறு வெயில் – பெருமாள் முருகன்
போக்கிடம் – விட்டல்ராவ்
ஆழி சூழ் உலகு – ஜோ டி குருஸ்
ரத்த உறவு – யூமா வாசுகி
ஆகிய நாவல்கள் அவ்வகையே எனினும் ஜோ டி குருஸின் இரண்டாவது நாவலான கொற்கை இப்பட்டியலில் முதலிடத்தில் வைக்கத் தக்கது.

எதைப்பற்றிய நாவல் இது?

”கால காலமா இங்க முத்தெடுத்த கத, பாண்டியபதி கொற்கய ஆண்ட கத, நாங்க இங்க பிழைக்க வந்த கத, பாய்மரக் கப்பலோடுன கத, கப்ப வந்த கத, வெள்ளக்காரம் வந்த கத, போன கத, இன்னும் என்னென்னமோ கதய…” பக் – 1113

1914 ஆம் ஆண்டில் துவங்கும் இந்நாவல் 1100 பக்கங்களைத் தாண்டி 2000ஆவது ஆண்டில் நிறைவடைகிறது தற்காலிகமாக. சொல்லப்பட்டவைகளினூடாக சொல்லப்பட வேண்டியவை ஏராளம் என்பதை நிறுவுகிறது இந்நாவல்.

எழுதிச் செல்லும் விதியின் கைகள் எழுதி மேற்செல்கையில் வீசி எறியப்படுபவர்களின் வாழ்க்கை, யானை வந்து மாலை போட்டு அதிர்ஷ்டம் அடித்த வாழ்க்கை, எது எப்படி என்றாலும் தனக்கென ஒரு கொள்கை வைத்து வாழ்பவர்களின் வாழ்க்கை, எந்தத் தொழிலும் நிரந்தரமல்ல என்பதைப் புரிந்து கொள்ள மறுத்தவர்களின் வாழ்க்கை, கிடைத்தைப் பற்றிக் கொண்டு மேலேறியவர்களின் வாழ்க்கை என இது வரையும் சித்திரம் எண்ணற்றது.

இந்த ஒற்றை நாவல் பல நாவல்களாக விரிகிறது. பாண்டியபதியின் வாழ்க்கை, பிலிப் தண்டல் வாழ்க்கை, சன்முகவேலின் வாழ்க்கை, பவுல் தண்டல் வாழ்க்கை, அல்வாரிஸ் வாழ்க்கை, ரிபேராக்கள் வாழ்க்கை, பல்டோனாக்கள் வாழ்க்கை, பர்னாந்துமார்கள் வாழ்க்கை, நாடார்கள் வாழ்க்கை, பரதவர்கள் வாழ்க்கை, கிருத்துவர்கள் வாழ்க்கை என ஒவ்வொன்றும் தன்னளவில் தனித்தனி நாவலாகவே தோன்றுகிறது.

நாவலின் ஊடாக ஒரு நூற்றாண்டுகாலமாக ஏற்பட்ட சமுதாய மாற்றத்தையும், வாழ்க்கை முறையில் ஏற்பட்ட மாற்றங்களையும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கிறது.

கால ஓட்டத்தில் நடந்த சில நிகழ்வுகளையும் பதிவு செய்திருப்பது நாவலின் நம்பகத்தன்மையைக் கூட்டுகிறது. காமராசர் மறைவு, தி மு க ஆட்சி பிடித்தல் சந்திரபாபு திருமண நிகழ்வு என அந்தந்த வருடத்தில் ஒரு கதாபாத்திரத்தின் வாயிலாகச் சொல்லி இருப்பது சுவாரசியமாக இருக்கிறது.

காலச்சுவடு பதிப்பக வெளியீடு
விலை : ரூ 800

”நாவலில் சொல்லவந்ததை ஒரு கட்டுரையிலேயே கூட சொல்லி முடித்திருக்கலாம். ஆனால் அதை அப்படி சொல்ல விரும்பவில்லை. வாழ்வாக சொல்ல விரும்பினேன். ஆழி சூழ் உலகு எழுதி முடித்த உடனே கொற்கையை எழுத உட்கார்ந்தேன். 2005 தொடங்கி 2009 ஆண்டு முடிய நாவலுக்காக உழைத்திருக்கிறேன்.” ஜோ டி குருஸின் பேட்டி

உங்கள் திசை நோக்கி என வணக்கத்தைச் சொல்கிறேன் தோழர் குருஸ்.

குறிப்பு : இஃதுவோர் மறுபதிவு