
கீழக் கோட்டர்ஸ் வேப்பமரம், அதனடியில் கயிற்றுக் கட்டிலில் படுத்திருக்கும் அப்பாயி, குருவிக்கூடு ஹேர்ஸ்டைல் ஆறுமுகம் அண்ணன், அவர் வளர்த்த ”டைகர்”, சிதம்பரம் மாமா, கருவாயன் இளங்கோ, ஜெயபால், ரெஜினா, அப்துல் அஜீஸ், எம்பாலன், கொட்டமடித்த கிணறு, தலைப்பிரட்டை பிடித்து வந்து குழம்பு வைக்கச் சொல்லி அம்மாவிடம் செய்த வம்பு, சண்முக நதிக்குக் குளிக்கச் சென்று தீ வைத்த வைக்கோல் படப்பு, பம்பரக் கயிற்றுக்கு ஹார்லிக்ஸ் டப்பா முடியைக் கட்டி வந்த பாலமுருகன், ஓட்டிப் பழகிய மட்கார்டு, பெல் ஏதுமற்ற சைக்கிள், எப்போதும் கேட்டுக் கொண்டிருந்த இலங்கை வர்த்தக ஒலிபரப்புக் கூட்டு ஸ்தாபன ஆசிய சேவை, கோபால் பற்பொடி என இன்னும் இன்னும் பலவற்றை ஞாபகப் படுத்தும் ஒற்றை நபராக வந்திருந்தார் பா.ராஜாராம் – கரு வேல நிழல் தருபவர்.
ஒரு வார்த்தை, சம்பவம், உடை, வாசனை, மாறுபட்ட நடை, உணவுப்பழக்கம் என ஏதோவொன்றுடன் மனிதர்களை அடையாளப்படுத்திக் கொள்கிறோம். அந்த ஒன்றை மீண்டும் பார்க்கவோ அனுபவிக்கவோ நேர்கையில் அந்த மனிதர்களின் ஞாபகம் மீளும். ஆனால் ஒட்டு மொத்த பால்யத்தின் நினைவுகளை இப்படிச் சட்டென ஒரே வார்த்தையில் உயிர்த்தெழ வைப்பது ராஜாராமால் மட்டும்தான் முடியும் – மக்கா.
ராஜாராம்,ஜ்யோவ்ராம்,குமார் என சில நண்பர்கள் பேனா நண்பர்களாக அறிமுகமாகி இருக்கிறார்கள்; நட்பையும் தொடர்ந்திருக்கிறார்கள். குழந்தை கிழித்துப் போட்ட காகிதமாக வாழ்க்கை அவர்களை திசைக் கொன்றாக எறிந்து விட்டது. பொருள் தேடும் நிமித்தம் தொடர்புகளைப் பேண இயாலாமற் போயிற்று.
தம்பியின் ஆலோசனைப் படி வலைப்பூ ஒன்றைத் தொடங்கி தனது கவிதைகளைப் பதிவு செய்திருக்கிறார் ராஜாராம். கவிதை வாசிப்பில் தீராத தாகம் கொண்ட ஜ்யோவ் கண்களில் அது பட, அந்தக் கவிதை முன்பு எங்கேயோ படித்தாற்போல இருக்கிறதே என யோச்சித்துச் சரியாகப் பிடித்துவிட்டார் ராஜாராமை.
விகடனில் வெளியான இவரது கவிதையைப் படித்து இன்னொரு பேனா நண்பர் விகடன் அலுவலகத்தில் பேசி ராஜாராமிற்கு ஒரு கடிதம் எழுதி இருக்கிறார்; அவர்தான் இவரோ என்ற அய்யத்துடன். அவரேதான் இவர் எனக் கண்டு கொண்ட பேனா நண்பரைப் பார்க்க கோவை வந்திருந்தார். 13 வருடங்களுக்குப் பிறகு துளிரும் நட்பு.
சிலரோடு சில விஷயங்களைப் பேசலம். இன்னும் சிலரோடு பலவற்றைப் பேசலாம். ஆனால் ராஜாராமோடு எதையும் பேசலாம். இத்தனை வருட வாழக்கையும் அதில் அவர் ஏறி இறங்கிய மேடு பள்ளங்களும் கடந்த தூரங்களும் காத்திருப்புகளும் எதிர்பார்த்தவைகளும் ஏமாற்றங்களும் என எல்லாம் அவரைப் பக்குவமாக்கி இருக்கின்றன.
வேப்பமர நிழல் போல அல்ல கருவேல நிழல். கூரிய முற்களால் செய்த படுக்கை விரிப்பு மரத்தினடியில். அதில் எப்படி ஆசுவாசம் செய்வது?
”கடுமையான வறட்சி எதையும் விளைவிக்க முடியாது. குளங்களில் எல்லாம் கருவேலமரமே வளர்ந்தது. எங்களுக்கு இளைப்பாற இடம் அதனடியில் என்பதைத் தவிர வேறு தேர்வு செய்ய வாய்ப்பே இல்லை. வேறு வழியின்றி அதையே பழக்கப் படுத்திக் கொண்டோம்.
ஆனால் கருவேலம்பூ வாசனைக்கு நிகரான ஒன்றை இதுவரை நான் நுகர்ந்ததில்லை”
உண்மைதான் ராஜாராம். உங்கள் மூலம் அதை நானும் நுகர்ந்தேன்.